வியாபாரிகள் பரிசு சீட்டு திட்டங்கள், குலுக்கல் நடத்தக் கூடாது: அரியலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களது வணிகத்தை பெருக்கி கொள்ளும் நோக்கத்தொடு பரிசு குலுக்கல் திட்டங்களை நடத்துகிறார்கள். பரிசு திட்டங்கள் மூலம் பொருட்களை விலை கூட்டி விற்பது, தரமற்ற பொருட்களை விற்பது, அளவு குறைப்பது, கலப்பட பொருட்கள் மற்றும் பழைய இருப்பு பொருட்களை விற்பனை செய்வது போன்ற செயல்கள் மூலம் நுகர்வோர்கள் வணிகர்களால் ஏமாற்றப்படுகிறார்கள்.
அரியலூர் மாவட்ட நுகர்வோரின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இனிவரும் நாட்களில் தனிநபர், விற்பனை கூடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தில் சீட்டு கூப்பன் திட்டங்கள், குலுக்கல் திட்டங்கள், பரிசு திட்டங்கள், சலுகை திட்டங்கள் போன்ற திட்டங்களை செயல்படுத்தக் கூடாது. மீறினால் தமிழ்நாடு பரிசு திட்டங்கள் (தடுப்பு) சட்டம் 1979-ன் படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எம்.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.